மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்யாதீர்..கமல் கடும் எதிர்ப்பு
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்துக்கு மறு தணிக்கை கூடாது என நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி விஜய் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதற்கு தமிழக பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாஜகவின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் முரளி அறிவித்திருக்கிறார். இது நாடு முழுவதும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Mersal was certified. Dont re-censor it . Counter criticism with logical response. Dont silence critics. India will shine when it speaks.
— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2017
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று இரவு பதிவிட்டுள்ளதாவது:
மெர்சல் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மெர்சல் திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்யக் கூடாது.
விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள்.
மாற்றுக் கருத்துகளை முன்வைக்கப்படும்போதுதான் இந்தியா மிளிரும். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.