சென்னை திரும்பும் கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலர் பதவியை பரிசாக தருகிறார் ஸ்டாலின்?
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமிப்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் நிரபராதி என விடுதலையாகி விட்ட கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை தருவது குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தாம் நிச்சயம் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார் கனிமொழி. இதனால் தாம் அதிகாரப்பூர்வமாக விடுதலையான பின்னர் தமக்கு கட்சியில் முக்கிய பதவி தரப்பட வேண்டும் என்பதில் கனிமொழி விருப்பமாக இருந்தார்.
பொருளாளர்?
இது தொடர்பாக கடந்த சில வாரங்களாக திமுக மேல்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வந்தது. கனிமொழி தரப்பில் திமுக பொருளாளர் பதவி கேட்பதாகவும் கூறப்பட்டது.
உற்சாக திமுக
இந்நிலையில் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரை இன்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு ஒட்டுமொத்த திமுகவை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது.
இனிப்புகளுடன் கொண்டாட்டம்
சென்னையில் தமது வீட்டில் கனிமொழியின் சகோதரரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது திமுக மூத்த தலைவர் எ.வ.வேலுவும் உடனிருந்தார்.
எஸ்பி சற்குணம் இடம்
இந்நிலையில் நிரபராதியாக விடுதலை பெற்ற தீர்ப்புடன் சென்னை திரும்பும் கனிமொழிக்கு பரிசாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்குவது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த திமுக துணைப் பொதுச்செயலர் சற்குணபாண்டியனின் இடத்துக்கு இதுவரை யாரும் நிரப்பப்படவில்லை. ஆகையால் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.