காவிரி விவகாரத்தை சினிமாவுடன் கலக்கும் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் விஷமம்
காவிரியை முன்வைத்து காலாவுக்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருப்பது விஷமத்தனமனாது.
சென்னை: காலா படத்தை வெளியிட வேண்டுமானால் காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் அறிவிக்க வேண்டும் என கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை விஷமமான நிபந்தனை விதித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.
காவிரி நதிநீர் உரிமை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒருவழியாக முடிவுக்கு வந்து அடுத்த கட்டமாக காவிரி மேலாண்மை ஆணையம் என்கிற நிலைக்கு சென்றுவிட்டது. கர்நாடகா அரசுதான் உச்சநீதிமன்றம் எதைச் சொன்னாலும் செய்ய முடியாது என அடம்பிடித்து அழிச்சாட்டியம் ஆடுகிறது.
அதேபோல தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான மக்களின் நல்லுறை சீர்குலைக்கும் வகையில் கன்னட அமைப்பினர் நடந்து கொள்கின்றனர். இதேபாணியில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையினரும் தற்போது நிபந்தனை வெளியிட்டுள்ளனர்.
காலா படத்துக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பு? அதுவும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டு மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.
அத்துடன் கர்நாடகா அரசும் காலா படத்துக்கு தடை விதிக்கவில்லை; பாதுகாப்பு கொடுக்க தயார் என்கிறது. அம்மாநில உயர்நீதிமன்றமும் காலா படத்தை வெளியிட பாதுகாப்பு கொடுங்கள் என உத்தரவிடுகிறது.
இப்போது கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை இப்படி நிபந்தனை விதிப்பது என்பது சட்டாம்பிள்ளைத்தனமானது. ஒரு கூட்டாட்சி கட்டமைப்பைக் கொண்ட தேசத்தில் இப்படியான விஷமத்தை தூவுவதல் என்பது எப்போதும் ஏற்புடையதல்ல. இது இருமாநில மக்களின் உறவுகளுக்கும் நல்லிணக்கத்துக்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை பொறுப்புடன் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை உணர வேண்டும்.
நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடையே வெறியைத் தூண்டி மோத விடும் இந்த போக்குதான் உண்மையான "சமூக விரோதமான செயல்" என்பது குறிப்பிடத்தக்கது.