பிரசாரத்திற்கு வந்துட்டு காரை விட்டு இறங்காமல் உள்ளேயே உட்கார்ந்திருந்த கார்த்திக்..!
மதுரை: மதுரைககுப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் கார்த்திக் பிரசார இடத்தை அடைந்தும், காரை விட்டு இறங்காமல் உள்ளேயே உட்கார்ந்திருந்ததால், டென்ஷன் ஆன தொண்டர்கள் காரைச் சுற்றி நின்று தட்டி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பனை ஆதரித்து நடிகர் கார்த்திக் கடந்த 10-ந்தேதி பிரசாரம் செய்ய வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்று இரவு அவர் தாமதமாக வந்ததால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பிரசாரம் செய்யாமல் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
இதனால் அன்று கார்த்திக்குக்காக காத்திருந்த கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கார்த்திக் மதுரை வந்தார். பசுமலை பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி பேசினார்.
பிரசாரத்தை முடித்துவிட்டு கீரைத்துறை ரயில்வே கேட் அருகே கார்த்திக் பிரசாரம் செய்வார் என்றும் அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வழியாக வந்த கார்த்திக் காரை விட்டு இறங்காமல் நீண்ட நேரம் காரிலேயே இருந்தார்.
ரொம்ப நேரமாக காத்திருந்து கடுப்பாகிப் போன தொண்டர்கள், என்னடா நடக்குது இங்கே என்று டென்ஷனாகி, கார்த்திக் காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்டவர்களுடன் சமரசம் பேசினார்.
ஆனாலும் கார்த்திக் காரை விட்டு இறங்கவில்லை. மாறாக அப்படியே ராமநாதபுரத்திற்குப் போய் விட்டார்.
என்ன நடக்குதுன்னு புரியலையே...!