சத்தியமூர்த்தி பவன் வந்த 'கா.சிதம்பரம்.': 'வீக்'காகும் வாசன், கெத்தாகும் ஈ.வி.கே.எஸ்.
சென்னை: பல காலமாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் வராத முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்க கட்சி தலைமையகத்திற்கு வந்தார்.
தமிழக காங்கிரஸில் வாசன், ப. சிதம்பரம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என பல கோஷ்டிகள் செயல்பட்டன. இதில் வாசன் கோஷ்டியினரே பல முக்கிய கட்சி பொறுப்புகளில் இருந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்வு செய்யப்பட்ட உடன் வாசன் கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி துவங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 5ல் 2 பேர் வாசன் பக்கம் சென்றுவிட்டனர். மாவட்ட தலைவர்களில் 58 பேரில் 23 பேர் வாசன் பக்கம் உள்ளனர். மீதமுள்ளவர்கள் காங்கிரஸுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 380 பேர் இளங்கோவன் பக்கம் உள்ளார்களாம். காங்கிரஸில் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்த கோஷ்டிகள் வாசன் வெளியேறியதும் ஒன்று சேர்ந்துவிட்டன.
பல காலமாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் வராமல் தனிக்கோஷ்டியாக செயல்பட்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி. இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இளங்கோவனை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் இளங்கோவன் ப.சிதம்பரத்தை இரண்டாவது முறையாக சந்தித்து கட்சியில் இருந்து யாரும் விலகாமல் இருக்கச் செய்வது பற்றி பேசியுள்ளார். ஏற்கனவே பல சோதனைகளை கட்சி சந்தித்து வரும் வேளையில் வாசன் பிரிந்து சென்றுள்ளதால் அவர் மீது பலருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளங்கோவனுக்கு ஆதரவும் பெருகி வருகிறது.












Click it and Unblock the Notifications