மின்வாரியம் குட்டிச் சுவரானது அ.தி.மு.க. ஆட்சியில்தான்.. ஜெ.,வுக்கு கருணாநிதி பதிலடி
சென்னை: தமிழக மின்வாரியம் குட்டிச் சுவரானது அதிமுக ஆட்சியில் தான் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மின்சார வாரியத்தையே தி.மு.கழக ஆட்சிதான் குட்டிச்சுவராக்கியது என்று ஆவேச முழக்கமிட்டிருக்கிறார். தமிழக மின்சார வாரியத்தை எந்த ஆட்சி கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது என்று பட்டிமன்றம் நடத்தித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? சாதாரண பாமர மக்களைக் கேட்டால்கூட, அ.தி.மு.க. ஆட்சியிலே தான் தமிழக மின் வாரியம் குட்டிச்சுவரானது என்று அடுக்கடுக்கான காரணங்களை எடுத்துக் கூறுவார்கள். கழக ஆட்சியில் எப்படி மின்வாரியம் குட்டிச்சுவரானது என்று ஜெயலலிதா எந்த விவரமும் கூறவில்லை. சாதாரண மக்களைக் கேட்டால் கூட அதிமுக ஆட்சியில்தான் மின்வாரியம் சீரழிந்தது என்பார்கள்.
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் நாகல்சாமி, மின்சாரத்தை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை முறையாகப் பின்பற்றுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி, தனியாரிடம் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதால் மின்வாரியத்தின் சுமை ரூ.94 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 1,600 மெகாவாட் உடன்குடி மின்திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
4-7-2015-ல் அதானி குழுமத்திடம் இருந்து சூரியசக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 7.01-க்கு வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இதே அதானி குழுமத்துடன் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரம் ரூ. 6.04-க்கு வாங்க மத்தியப் பிரதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகல்சாமி, அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்ட போதே அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என கூறினார்.
சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவுகள் குறைந்து விட்டால் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரத்தின் விலை ரூ. 5.86 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில் அதானி குழுமத்திடம் இருந்து ரூ. 7.01-க்கு வாங்குவதால் தமிழக மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படும்.
உடன்குடி மின் நிலையம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2-வது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
இவ்வாறு அதிமுக ஆட்சியில் மின்வாரியத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை பல்வேறு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இவற்றையெல்லாம் பலமுறை அதிமுக அரசின் கவனத்துக்கு நான் கொண்டு வந்துள்ளேன். திமுக அரசு மீது முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியதால் அவரை மதித்து இந்தப் பதில்களை கூறியிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் அதிமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.