நிவாரணப் உதவிகளை செய்யவிடாமல் அதிமுகவினர் தடுக்கிறார்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை ஒழுங்காக செய்யவிடாமல் அதிமுகவினர் தடுத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

விடாது மழை பெய்து வந்ததால் சென்னை நகரமே தனித் தீவாக மாறியது. பல இடங்களில் உணவு, குடிதண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சென்னை அண்ணா அறிவாலத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. அதனை கருணாநிதி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில், வெள்ள நிவாரணப் பொருள்களையெல்லாம் தடுக்கிறார்கள். தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வருகின்ற பொருள்களை எல்லாம் தடுத்து அதிலே முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டி அனுப்புகிறார்கள். இதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இதைப் பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை. இப்படி நடந்து கொள்வது என்பது அவர்களுடைய சுபாவத்தைக் காட்டுகிறது. அவர்களும் உதவி செய்ய மாட்டார்கள். இரக்கம் கொண்டு உதவி செய்பவர்களின் பணிகளையும் அவர்கள் ஒழுங்காகச் செய்ய விடமாட்டார்கள். அது தான் அவர்கள் (அ.தி.மு.க.). இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications