தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றி விவாதம் தேவை: கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
சென்னை: தி.மு.க.வில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏற்பட்டுள்ள நெளிவுகளை நிமிர்த்தி கட்சியை வலுப்படுத்த சூளுரை மேற்கொள்வோம் என்று தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தோல்வி நிரந்தரமல்ல
''தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் 1962 ஆம் ஆண்டு நடைபெற்றபோது, காஞ்சித் தொகுதியில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணா வெற்றி வாய்ப்பினை இழந்தார் அப்போது, அண்ணா, ‘உள்ளம் உடைய இடம் கொடுக்கக் கூடாது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு காரியமாற்றப் புறப்படுங்கள். பெருமூச்செறிவதை நிறுத்திக் கொண்டு முன்னிலும் அதிக ஆர்வம் காட்டி, பணிபுரியுங்கள் என்றார்.
வெற்றி தோல்வி சகஜம்
அகில இந்திய அளவில் அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றியையும் பெற்றிருக்கின்றன. தோல்வியையும் தழுவி இருக்கின்றன. தி.மு.க.வை பொறுத்தவரை, தமிழகத்தில் எந்தக் கட்சியும் இதுவரை பெறாத மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறது. மிகப் பெரிய தோல்வியையும் அடைந்திருக்கிறது. தி.மு.க. வெற்றி பெறும்போது வாயடைத்துப் போன கூட்டம், தோல்வி அடையும்போது மட்டும் "தொலைந்தது தி.மு.க., நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது" என்று இறுக்கிக் கட்டிக் கொண்டு நாலாந்தர வேலைகளில் இறங்குவதையும் நாம் தொடர்ந்து கண்டு கொண்டுதான் வருகிறோம்.
விதையாக விழுவோம்
தி.மு.க. ஒவ்வொரு முறை விழும்போதும் விதையாகவே விழுகிறது. பின் மாபெரும் தருவாக எழுகிறது. வாக்கு விகிதாசாரம் இப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வாக்கு ஒரு கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 825. இது பதிவான மொத்த வாக்குகளில் 44.59 சதவிகிதமாகும். தி.மு.க.விற்கு கிடைத்த வாக்குகள் 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்குகள். இது பதிவான வாக்குகளில் 23.72 சதவிகிதமாகும். எனினும் ஒரு இடத்திலே கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை.
வாக்கு சதவிகிதம்
ஆனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு 25.09 சதவிகித வாக்குகள் கிடைத்தபோது, தி.மு.க. 18 தொகுதிகளிலே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அளவில் பா.ஜ.க. பெற்றிருக்கும் வாக்குகள் 31.0 சதவிகிதம். அது வெற்றி பெற்ற இடங்கள் 282. அகில இந்திய அளவில் காங்கிரஸ் பெற்றிருக்கும் ஓட்டு விகிதம் 19.3 சதவிகிதம். ஆனால் அது வெற்றி பெற்ற இடங்களோ 44.
தேர்தல் விநோதங்கள்
தேசிய அளவில் அ.தி.மு.க. பெற்றிருக்கும் ஓட்டு விகிதம் 3.3 சதவிகிதம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அதே 3.3 சதவிகிதம் வாக்குகளைத்தான் அகில இந்திய அளவில் பெற்றுள்ளது. ஆனால் அ.தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள் 37; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெற்றிருக்கும் இடங்களோ 9.
3.4 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற சமாஜ்வாடி கட்சி பெற்ற இடங்கள் 5. பகுஜன் சமாஜ் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் விகிதம் 4.1 சதவிகிதம். ஆனால் ஓர் இடத்தைக் கூட அந்தக் கட்சி பெறவில்லை.
திமுக வாக்கு சதவிகிதம்
அகில இந்திய அளவில் தி.மு.க. பெற்றிருக்கும் வாக்குகளின் சதவிகிதம் 1.70. எனினும் தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே அகில இந்திய அளவில் பிஜூ ஜனதா தளம் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் சதவிகிதம் 1.70. ஆனால் அந்தக் கட்சி வெற்றி பெற்ற இடங்களோ 20. புள்ளி விவரங்கள் உணர்த்தும் இவையனைத்தும் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் விநோதங்கள்.
விகிதாச்சார பிரதிநிதித்துவமுறை
இப்படிப்பட்ட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா திரும்ப திரும்பச் சொன்னார்கள். இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத இந்த வாதம் இப்போது பல தேசிய கட்சிகளால் வலியுறுத்தப்படுகிறது.
அர்ஜூனன் வைத்த குறி
சூளுரை சோதனை, வேதனை இல்லாத வாழ்க்கையில் சுவை இல்லை. மேடு-பள்ளம், வெற்றி-தோல்வி இல்லாத அரசியலில் வேகம் இல்லை. உறங்குவது போன்றது தோல்வி; உறங்கி விழிப்பதைப் போன்றது வெற்றி. உறங்குவதும், விழிப்பதும் மனித வாழ்வில் குறிப்பிட்ட இடைவெளியில் மாறி மாறி நடப்பவை. வெற்றியாயினும், தோல்வியாயினும், அர்ச்சுனன் அம்பினால் வைத்த குறியைப் போல, நமது லட்சியப் பயணத்தில் நாம் கொண்டுள்ள ஈடுபாடு சிறிதும் பிறழக்கூடாது.
திமுகவை வலுப்படுத்துக
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை பெரியாரும், அண்ணாவும் எதற்காக வடிவமைத்துத் தந்தார்கள் என்பதைச் சிந்தித்து, தெளிவு பெற்று, தி.மு.க.வில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்டுள்ள நெளிவுகளை நிமிர்த்தி, கட்டுப்பாடு போற்றி; ஒருங்கிணைப்பு உணர்வோடு தி.மு. க.வை மேலும் வலுப்படுத்திடவும், தமிழகத்தில் தன்மான உணர்வு பெருகிடவும், தி.மு. க.வினர் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.