காவிரி விவகாரத்தில் அடுத்து என்ன? முதல்வர் ஜெ.வுக்கு கருணாநிதி சரமாரி கேள்விகள்
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தான் என்ன? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதி மன்றத்திலே முறையிட்டு, அதன் பிறகே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், அதற்கான தண்ணீர் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி, வேதனையடைந்து வருகிறார்கள். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை காவேரியில் உடனடியாக வழங்கிட, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
கர்நாடக மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களும், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் இந்த வழக்கில் வாதிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் கூறும்போது, சட்டத்திற்கு அப்பாற்பட்டு, கர்நாடக அரசு, மனிதாபி மானத்தோடு அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங் களுக்கிடையில் சுமூகமான ஒரு சூழல் நிலவ வேண்டுமென்றும், நடுவர் மன்றத் தீர்ப்பில் எந்தெந்த நேரங்களில் எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், அந்த அடிப்படையில் தற்போது உள்ள தண்ணீர் இருப்பில் எவ்வளவு நீரை தமிழகத்திற்கு வழங்க முடியும் என்பது குறித்து மாநில அரசிடம் கலந்தாலோசித்து நீதி மன்றத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கினை 5-9-2016க்கு ஒத்தி வைத்திருந்தார்கள்.
5ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டும் கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவு குறைந்துள்ளது என்றும், கர்நாடக விவசாயிகளுக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் வாதிட்டிருக்கிறார். தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிடும்போது, தமிழக விவசாயிகள் ஏற்கனவே குறுவைச் சாகுபடியை இழந்து பெரும் நட்டத்தில் உள்ளனர்.
சம்பா பயிரையாவது காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் எங்களுக்கு 40 டி.எம்.சி. தண்ணீராவது தர வேண்டும். அப்போது தான் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் சம்பா சாகுபடியும் அழிந்து விடும் என்றெல்லாம் வாதிட்டிருக்கிறார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "சம்பா பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் நலன் கருதி தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம்.
கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி, விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications