சம்பா சாகுபடிக்கு உச்சநீதிமன்ற உத்தரவால் பயன் ஏதும் இல்லை
வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு நிச்சயமாகச் சம்பாவுக்கு போதுமானதல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கூடுதல் தண்ணீர் தரக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட காவேரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமி மலை சுந்தர விமல்நாதன், காவேரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி. நடராசன், தமிழக ஏரி மற்றம் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவ நாதன், த.மா.கா. விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் "ஒரு கணக்கும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பத்து நாளைக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்" என்று உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு குழுவை அமைத்து, பிரதமரை நேரில் சந்தித்து கர் நாடகத்திலிருந்து நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் பெற வேண்டும் என்றும், மறு சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்து கூடுதல் தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
நேற்றையதினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தில், "நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம். கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.
தமிழக அரசு 8-4-2013 அன்று முறையிட்டதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றம் தான் 10-5-2013இல் இந்த காவேரி கண்காணிப்புக் குழுவை அமைக்க அறிவுறுத்தியது. இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது; சட்ட அங்கீகாரமும் கிடையாது; எந்த மாநிலத்தையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் கிடையாது; இந்தக் குழுவே ஒரு வீண் முயற்சி. இந்தக் கருத்தை அப்போதே நாம் வெளியிட்டிருந்தோம்.
முதலமைச்சர் ஜெயலலிதாவும் 3-6-2014ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அளித்த மனுவில் 5ஆம் பக்கத்தில், "காவேரி கண்காணிப்புக் குழு"வை பற்றி ஜெயலலிதாவே உயர்வாகச் சொல்லிக் கொள்ளவில்லை. இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவும் 1-6-2013 மற்றும் 12-6-2013 அன்றும் டெல்லியிலே கூடி எந்தவிதமான பயனுமின்றி கலைந்தது.
இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவிடம் தான் உச்ச நீதி மன்றம் தமிழக அரசை மீண்டும் அணுகும்படி நேற்றையதினம் கூறியிருக்கின்றது.