அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து நிற்கும் கருணாநிதி!
சட்டமன்றத்தில் கருணாநிதி செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாக இருந்தன.
சென்னை: சட்டசபையில் கருணாநிதியின் இருத்தல் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது - பேச்சுக்கள் அத்தனையும் சுவையானது - காரசாரமானது - எதிர்த்தரப்பினரை பேச்சால் திணறடிப்பது.
கருணாநிதிக்கு நிகராக வாதாடியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மட்டுமே. அவருக்கு பிறகு இன்றுவரை விவாதத்திலா, விவரத்திலோ - புள்ளிவிவரத் தகவலிலோ - பதிலளிக்கும் பேச்சுத்திறனிலோ - திடீர் திடீரென்று கடந்த கால சம்பவங்களையும், சரித்திர சான்றுகளையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளை திணறடிப்பதிலோ அவரை இன்றுவரை யாருமே மிஞ்சியதில்லை. இவர் முதல்வராக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகூட போய் சட்டசபையில் உட்கார்ந்து கொள்வாராம். அங்கு பணியாற்றுபவர்களுக்கோ, முதல்வர் எப்போ, என்ன விவரம் கேட்டுவிடுவாரோ என்று முனகிகொண்டே இருப்பார்களாம்.

புழல் ஏரி உடைந்தது
கவலையில் எதிர்க்கட்சி தலைவராக அங்கம் வகித்தாலும் விமர்சன முத்தெடுத்துதான் வெளியே வருவார். ஒருமுறை புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்ததும், அதை சரிப்படுத்துவதற்கான பொதுப்பணித்துறையினரிடம் ஆலோசனைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லாமல், நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவத்தினை இன்றைய இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியம்.

பணம் இல்லாத நிலை
1974-ம் ஆண்டு ஜனவரி 1 அன்று. கருணாநிதி ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்தார். அப்போது, மிடுக்கான உடை அணிந்து அரசு ஜீப்பில் வலம் வரும் தாசில்தார் ஒருவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் ஒரு பிராமணர். இறந்த தாசில்தாரை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்து கருணாநிதி காதில் விழுகிறது.

புதிய ஆணை
அடடா! அரசு ஊழியர்களின் நிலைமை இவ்வளவு பரிதாபமாக உள்ளதே என யோசிக்கிறார். தலைமை செயலாளருடன் விவாதித்தார். உடனடியாக சென்னை திரும்புகிறார். ஒரு ஆணையும் பிறப்பிக்கிறார் (நாள் 1.1.1974). அந்த ஆணை என்னவென்றால், "அரசு ஊழியர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்து விட்டால் உடனே 10,000 கொடுப்பது. அதற்காக மாதம் 10 ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளலாம். இதுவரை எவ்வளவு பிடித்தம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் எப்போது இறந்தாலும் இத் தொகை தரப்பட வேண்டும்" இதுதான் அந்த ஆணை.

மீதியை கொடுங்கள்
ஆணையும் அமலுக்கு வந்தது. ஆனால் 9.1.1974 அன்று உயிரிழந்த தாசில்தாருக்கு இந்த சட்டம் பொருந்தாதே? காரணம் மாதம் 10 ரூபாய் பிடித்திருந்தால்தானே இந்த திட்டம் பொருந்தும்? தாசில்தாரின் மனைவி இதுகுறித்து கருணாநிதியிடம் சென்று முறையிட்டார். கருணாநிதியோ, துறை செயலாளரை அழைத்து, இறந்த ஊழியர் 9 நாட்கள் வேலை பார்த்திருக்கிறார். அவரது 9 நாள் சம்பளத்தில் இந்த 10 ரூபாயை கழித்து கொண்டு ரூ.10,000 கொடுங்கள் என்றார்.

வியந்த ஊழியர்கள்
அதன்படி அந்த ஊழியரின் மனைவியிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அனைத்துமே ஒரே நாளில், அதாவது தாசில்தார் இறந்து 24 மணி நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கருணாநிதியின் இந்த உத்தரவை கேட்டதும் தலைமை செயலகமே வியந்து போனது.. இவ்வளவு சாதுர்யமா என வியந்து நின்றது. இன்று பிடித்தம் செய்யப்படும் பிஎப் வந்தது இப்படித்தான்.












Click it and Unblock the Notifications