முரசொலி நாளிதழால் உலக சாதனை படைத்தவர் கருணாநிதி!
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதளான முரசொலி மூலம் புது சாதனை படைத்தவர் திமுக தலைவராக இருந்த கருணாநிதி.
1942 ஆகஸ்ட் 10ம் தேதியன்று ஒரு துண்டுப் பிரசுரமாக முரசொலியைப் பிரசுரித்தார் கருணாநிதி. 1944ஆம் வருடம் வரை சேரன் என்ற புனைப் பெயரில்தான் தனது படைப்புகளை எழுதிவந்தார் கருணாநிதி.
1944 காலகட்டத்தில் இதழ் வெளிவருவது தடைபட்டது. அதற்குப் பின், 1948ஆம் ஆண்டு பொங்கல் நாளிலிருந்து மீண்டும் வெளிவர ஆரம்பித்தது முரசொலி. அதன் பிறகு, 1954 முதல் சென்னையிலிருந்து வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. 1960 வரையில் வார இதழாகவே வெளிவந்த முரசொலி, அண்ணா சாலையில் ஒரு கட்டடத்தில் இருந்து நிலையாக செயல்பட ஆரம்பித்தது.
1960ஆம் வருடம் செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்துதான் தினசரியாக வர ஆரம்பித்தது.
1954ல் துவங்கி, 2016ல் உடல்நலம் குன்றும்வரை, கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தக் கடிதங்களை தன் கட்சித் தொண்டர்களுக்காக எழுதி வந்திருக்கிறார் கருணாநிதி. உடன்பிறப்பே என தொடங்கும் இந்த கடிதங்கள்தான், அவரை கட்சி தொண்டர்களுடன் ஒருங்கிணைத்து வைத்திருந்தது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கான நியாயங்களை தொண்டர்கள் அறிந்து கொண்டு அதற்கு உடன்பட இந்த கடிதம்தான் உதவியது.
ஒரு கட்சியின் தலைவரே, பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சுமார் 62 ஆண்டுகள் தொண்டர்களுக்கு எழுதி வந்தது உலகில் வேறு எங்கு இல்லாதது என்ற சாதனையை படைத்தார் கருணாநிதி.