சேது திட்டத்தில் மோகன் பராசரன் மதவாதி போல கருத்து சொல்வதா?: கருணாநிதி
சென்னையில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கருணாநிதி கூறியதாவது:
மத்திய அரசில் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த மோகன் பராசரன், சேது சமுத்திரத் திட்ட வழக்கில் ஆஜராகப் போவதில்லை என்று திடீரென விலகியிருக்கிறாரே?
ஏடுகளில் அந்தச் செய்தியைப் பார்த்தேன். நேற்றையதினம் வந்த செய்திகளில், "இந்த வழக்கில் அவருடைய தந்தை, மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜராகிறார். இதனால், முக்கியமான இந்த வழக்கின் நலன் கருதியும், எவ்வித முரண்பாடும் ஏற்படாமல் இருப்பதற்காக ஆஜராவதிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேறு ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனக்குப் பதிலாக இனிமேல் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜராவார்" என்று கூறியதாக ஒரு ஏட்டில் செய்தி வந்துள்ளது.
வேறொரு இதழில், இலங்கை மன்னன் ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட தனது மனைவி சீதாவை மீட்பதற்காக ராமன், ராமர் பாலத்தைக் கட்டினார் என்பதை அவர் நம்புவதாகவும், மேலும் இந்த வழக்கில் ஒரு மனுதாரருக்காக அவருடைய தந்தை கே.பராசரன் ஆஜராவதால் இந்த வழக்கில் தான் தொடர்ந்து வாதாடுவது முரண்பட்டதாக இருக்கும் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஒரு மதச் சார்பற்ற அரசு. அந்த அரசின் வழக்குரைஞரான, சொலிசிட்டர் ஜெனரலாக இது நாள் வரை மோகன் பராசரன் பணியாற்றி வந்தவர், திடீரென்று மத்திய அரசின் முடிவுக்கு மாறாக, தன்னை ஒரு மதவாதி என்பதைப் போலத் தெரிவித்திருக்கிறாரா? என்று தெரியவில்லை.
மேலும் அவர் சொலிசிட்டர் பதவியிலிருந்தே விலகியதாகத் தெரியவில்லை. இந்த ஒரு வழக்கிலிருந்து மட்டும் விலகியதாகத் தெரிகிறது.
சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்குகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன் வந்து உச்ச நீதி மன்றத்தில் ஒப்புதல் தெரிவித்திருக்கின்ற நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, ஒரு மத வாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை.
தமிழகத்தில் பார்வையற்றவர்கள் கடந்த ஒன்பது நாட்களாக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்ணா விரதம் இருக்கிறார்கள். 3 பேர் கவலைக் கிடமாக இருக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
என்னைப் பொறுத்தவரையில் இந்தச் செயலைக் கண்டிக்கத்தான் முடியும். பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை இந்த அரசு ஆரம்பம் முதல் அலட்சிய கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு மூத்த கலைஞர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அழைப்பிதழ் கூட அனுப்பப்படாததைப் பற்றியும் உங்கள் கருத்து?
நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஒரு கலைஞனாக இதைத்தான் நான் சொல்ல முடியும்.