இந்திய மீனவர்களுக்கு சிறை; இலங்கை மீனவர்களுக்கு உதவியா? கருணாநதி வேதனை
சென்னை: இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டுகின்ற அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்டிட வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவிலே உள்ள தமிழக மீனவர்களின் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு நிரந்தரமாக முடிவு கட்டி முழுமையான தீர்வு காண முயற்சி எடுக்காத இந்திய அரசு, இலங்கை மீனவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி, படகுகளையும், கருவிகளையும் வழங்கிட முன் வந்திருப்பது தமிழக மக்களுக்கும், குறிப்பாக மீனவர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

இலங்கைச் சிறையிலே உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதை நிறுத்தவும், தமிழகத் தலைவர்கள் பல முறை இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
இலங்கை அரசாக நினைத்துக் கொண்டால் சில மீனவர்களை விடுவிப்பார்கள். ஆனால் அவர்களின் படகுகளைத் திரும்பத் தர மாட்டார்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப் படவில்லை. இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டுகின்ற அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்டிட வேண்டுமென்று தான் திரும்பத் திரும்ப மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications