Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கருணாநிதி ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

''தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 15-4-2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு கடிதத்தை, தமிழக ஆட்சியாளர்களிடம் 18-2-2015 அன்றே வழங்கியும், இதுவரை இந்த ஆட்சியாளர்கள் அதுபற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை என்றும், எனவே அறிவித்தவாறு போராட்டத்தைத் தொடங்குவதாகவும், அதற்கு ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்கள்.

Karunanidhi supports noon meal workers strike

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அமைப்பாளர்களாக, சமையலர்களாக, சமையல் உதவியாளர்களாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். சத்துணவு ஊழியர்களுடைய கல்வித்தகுதியோடு அரசின் மற்ற பல துறைகளில் பணியிலே சேர்ந்தவர்கள் அதிக ஊதியம் பெறுவதாகவும், ஆனால் தங்களின் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதனை உயர்த்தித் தர வேண்டுமென்பது தான் இவர்களின் முக்கிய கோரிக்கை. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், காலிப்பணியிடம், பணிச்சுமை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துத் தான் இவர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசின் சமூக நலத் துறை அமைச்சர் 7-5-2013 அன்று சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசிவிட்டு, தமிழக முதலமைச்சரிடம் அவற்றைத் தெரிவித்து ஒரு சில நாட்களில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தரப்பட்டதாகவும், அந்த வாக்குறுதியும் இது நாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் இந்தச்சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சமூக நலத் துறை அமைச்சருடன் பேசி ஆண்டுகள் இரண்டாகின்றன. இன்னும் துறை அமைச்சரால், முதல்வரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க முடியவில்லையோ என்னவோ?

2011ஆம் பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், 48வது பத்தியில், "சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்" என்று கூறி அவர்களின் வாக்குகளையெல்லாம் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, அவர்களுக்கு அளித்த உறுதிமொழிகளையே காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். எனவே தான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு தற்போது சத்துணவு ஊழியர்கள் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முன் வராத அ.தி.மு.க. அரசு, இந்த ஊழியர்களை எச்சரிக்கும் வகையிலும், போராட்டத்தை நசுக்குகின்ற வகையிலும் வேலை நிறுத்தத்திலே ஈடுபடுபவர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சமூக நலத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பியிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. ஆனால் சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி அரசின் இந்த எச்சரிக்கையை மீறி போராட்டம் நடைபெறுமென்று அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சத்துணவு ஊழியர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, அப்படிப்பட்ட ஆட்சியினரை எதிர்த்து சத்துணவு ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவைத்தெரிவிப்பதோடு, இனியாவது அ.தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையிலே ஈடுபடாமல், சத்துணவுப் பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை யெல்லாம் உடனடியாக அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+