யாருக்கும் ஒருதலைபட்சமாக திமுக தலைமை நடக்காது.. கருணாநிதி
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலில் யாருக்கும் எந்த சூழலிலும் ஒரு தலைபட்சமாக கட்சித் தலைமை நடந்து கொள்ளாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தொண்டர்களுக்கு இதைத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
கருணாநிதியின் அறிக்கையிலிருந்து....

14வது அமைப்புத் தேர்தல்
தி.மு.க.வின் 14வது அமைப்புத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமைப்புத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 36 ஆயிரத்து 744. ஊராட்சி தி.மு.க. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நான்கு கட்டங்களாகவும், பேரூர் தி.மு.க. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நான்கு கட்டங்களாகவும் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது ஒன்றிய, நகர தி.மு.க. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள்
தி.மு.க. தலைமை சொல்கின்ற ஆணையாளர்கள், தாங்கள் தி.மு.க. தலைமைக்கு நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து கடமையாற்றிடுவதோடு, நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுகின்ற இரு தரப்பினருமே தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

புகார்கள் வரத்தான் செய்கின்றன
தி.மு.க. தலைமைக்கும், எனக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்தத்தேர்தல் குறித்து சில புகார் கடிதங்கள் வரத்தான் செய்கின்றன.

இது இயற்கைதான்
மிகப் பெரியதொரு ஜனநாயக இயக்கத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்ளும் தேர்தலில், போட்டிகள் இருப்பது இயற்கைதான். அதுவும் தி.மு.க. போன்ற மக்கள் இயக்கத்தில் ஒரே பொறுப்புக்குப் பலர் வர விரும்புவதும், அதன் காரணமாகப் போட்டி கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று தான். நாம் மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி எங்கேயாவது சிறு தவறுகள் நடந்தால்கூட, அவற்றைப்பற்றி விசாரித்து களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு முன்னுதாரணங்கள் உண்டு.

விசாரிக்க ஏற்பாடு
தற்போதுகூட புகார்கள் வந்தால் அவற்றின் உண்மைத்தன்மை பற்றி அறிவதற்காக அன்றாடம் தலைமை அலுவலகத்தில் இரண்டு அமைப்புச் செயலாளர்கள் விசாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக முறைப்படி, கட்சியின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடைபெறும் இந்தக்கட்சித்தேர்தலில் தி.மு.க. தலைமை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக நிச்சயம் நடந்து கொள்ளாது.

அனைவரும் கட்சியினர்தஐஆன்
போட்டியிடுபவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்கள். அதிலே ஜனநாயக ரீதியாக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் தலைமையின் இசைவு கிட்டும். வெற்றி வாய்ப்பினை இழந்தவர்களும் தி.மு.க.வினர் தான். அவர்கள் அடுத்த முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க.வினரின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறத்தொடர்ந்து அயராமல் பாடுபட வேண்டுமே தவிர, தி.மு.க.வில் குறுக்கு வழி எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

வலிவோடும் பொலிவோடும்
எனவே நடை பெறும் இந்த உள்கட்சி அமைப்புத்தேர்தலை நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்தி, தி.மு.க. மேலும் வலிவும் பொலிவும் பெற்றிட தி.மு.க.வினர் அனைவரும் தேவையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமென்று மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இது கட்சி அல்ல இயக்கம்
தி.மு.க. ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச்சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேரும், யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப்பாசறை போன்றதாகும்.

பகைவர்கள் கூழாகிப் போவார்கள்
இதிலே பகைவர்கள் உள்ளே புக நினைத்தால், அவர்கள் எங்கள் நெருக்கத்தின் இடையில் சிக்கிக் கூழாகிப் போவார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications