கரூரில் அமைச்சர் தலைமையில் அதிமுக ரகசிய விசாரணைக் கூட்டம்- ஆஜரான செய்தியாளர்களால் பரபரப்பு!
கரூர்: கரூரில் நடைபெற்ற அதிமுக ரகசிய கட்சிக் கூட்டத்தில், ஆளும் கட்சியினர் பத்திரிக்கையாளர்களைக் கண்டு பதிலளிக்காமல் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் நகராட்சி கூட்டம் கடந்த 30-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளும் அ.தி.மு.க கட்சியை சார்ந்த 37 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும், தங்கள் வார்டு மேம்பாட்டிற்காகவும் குரல் எழுப்பி வெளி நடப்பு செய்யும் எதிர் கட்சி கவுன்சிலர்கள் மட்டும் அன்று சரியாக கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
ம.தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கவுன்சிலர்கள் 11 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதனை அறியாத கரூர் நகராட்சி தலைவரான அ.தி.மு.க வை சார்ந்த செல்வராஜ் கூட்ட அரங்கிற்குள் அமர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றார்.

அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் 37 பேரும் கூட்டத்தை புறக்கணித்ததை கண்டு திடுக்கிட்டார். ஆனால் எதிர்கட்சி கவுன்சிலர்கள் சரியாக வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து மன்றத்தை விட்டு அவசரமாக வெளியேறினார்.
இச்சம்பவம் அ.தி.மு.க தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், தமிழக போக்குவரத்து துறை, தொழில் துறை அமைச்சருமான தங்கமணி தலைமையில் கரூர் சுற்றுலா மையத்தில் கரூர் நகராட்சியின் அனைத்து அ.தி.மு.க கவுன்சிலர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த இரகசிய கூட்ட விசாரணையில் கவுன்சிலர்கள் தங்கள் மனக்குறைகளை காரசாரமாக எடுத்துக் கூறினர். இதனால் கட்சியின் அ.தி.மு.க வினர் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த இரகசிய கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ மற்றும் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்ட நிகழ்வை படம், வீடியோ எடுக்க பத்திரிக்கையாளர்களும் குவிந்ததால் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications