கரூரில் 109டிகிரி வெயில் தகிக்கிறது - சென்னையில் 102 டிகிரி பதிவானது
தமிழகத்தில் வெயில் கொளுத்துகிறது. கரூரில் 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. கரூரில் 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை தாம்பரத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே வெப்பம் அதிகரித்துள்ளது. மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்களில் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.
2016 ஆம் ஆண்டில் பல நகரங்களில் வெப்பநிலை அதிகமாகவே இருந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வழக்கத்தைவிட இந்த ஆண்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோடையில் வெப்பம் அதிகம் இருக்கும் என்ற இந்திய வானிலை மைய கோடைகால முன்னறிவிப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், வழக்கத்தைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே, தமிழகத்தில் வெயில் தகித்து வருகிறது. இன்றைய தினம் காலையில் இருந்தே வெப்பம் அனலாக தகிக்கிறது. கரூரில் அதிகபட்சமாக இன்றைய தினம் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஈரோடு, திருச்சி, வேலூர்
ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோல வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
மதுரை, சென்னையில் 102 டிகிரி
மதுரையில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. தாம்பரத்தில் இந்த ஆண்டு முதன் முறையாக 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தஞ்சை கும்பகோணம், ராஜபாளையத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அனல் காற்று
பல நகரங்களில் அனல்காற்று வீசுவதால் மக்கள் பகல் 11 மணிமுதல் மாலை 5 வரையிலும் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போயுள்ளனர். வெப்பநிலை அதிகரித்துள்ளதால் குளிர்பான கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.