தோழன்.. சென்னைக்கு உதவிய சீக்கியர்கள்.. கேரளா வெள்ளத்திலும் கரம் கொடுத்து உதவி!
கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் சீக்கியர்களும், சீக்கிய அமைப்புகளும் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
சென்னை: கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் சீக்கியர்களும், சீக்கிய அமைப்புகளும் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு கேரளா மக்கள் பெரிய அளவில் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது.
இதனால் அங்கே பெரிய வெள்ளம் ஏற்பட்டது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
சீக்கியர்கள் உதவி
இந்த நிலையில்தான் கேரளாவில் வெள்ளம் என்றவுடன் உதவி செய்வதற்காக சீக்கியர்கள் அவர்கள் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு வந்துள்ளனர். பல மாநிலங்களில் உள்ள சீக்கியர்கள், கேரளா நோக்கி படை எடுத்து இருக்கிறார்கள். களத்தில் இறங்கி மக்களை காப்பாற்ற நிறைய ஆட்கள் இருந்த காரணத்தால், இவர்கள் உணவு சமைக்கும் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
|
நான்கு நாட்களாக
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவர்கள்தான் சமைத்து உணவுகளை அனுப்பி இருக்கிறார்கள். நான்கிற்கும் அதிகமான மாவட்டங்களில் தங்கி இவர்கள் உணவு சமைத்து கொடுத்து இருக்கிறார்கள். டன் கணக்கில் சொந்தமாக பொருட்களை வாங்கி வந்து இவர்கள் உணவு சமைத்து இருக்கிறார்கள்.
கால்சா எய்ட் அமைப்பு
அதேபோல் சீக்கியர்கள் நடத்தும் அமைப்பான கால்சா அமைப்பும் களத்தில் இறங்கி உதவி செய்து இருக்கிறார்கள். மக்களிடம் நேரிடையாக சென்று சமைத்த உணவுகளை இவர்கள் வழங்கி உள்ளனர். இதற்காக இவர்களே பொருட்களை லாரியில் ஏற்றிவந்து எல்லோருக்கும் விநியோகம் செய்து இருக்கிறார்கள்.
சென்னை வெள்ளம்
இதே அமைப்புதான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் உதவினார்கள். சென்னையில் ஆரம்பத்தில் இருந்தே உதவிய சில அமைப்புகளில் இவர்களும் அடக்கம். எங்கே பேரிடர் ஏற்பட்டாலும் முதல் ஆளாக அங்கே உதவி செய்ய இவர்கள் செல்வது வழக்கம்.