புதுச்சேரியில் கொலை செய்து தலையை ஏன் கடலூர் காவல் நிலையத்தில் வீசினார்கள் தெரியுமா?
புதுச்சேரியில் சுவேதன் என்ற 17 வயது சிறுவனை கொலை செய்து விட்டு தலையை ஏன் கடலூர் காவல்நிலையத்தில் வீசினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர்: இளைஞரின் தலையை துண்டித்து கடலூர் காவல் நிலையத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுச்சேரியில் கொலை செய்து விட்டு கடலூர் காவல்நிலையத்தில் தலையை ஏன் வீசிச்சென்றார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மனித தலை ஒன்றை வீசிவிட்டு சென்றனர். மனித தலை உருண்டு வருவதை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
தலையை துண்டித்து காவல்நிலையத்தில் வீசப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
எதற்காக கொலை?
இதைத்தொடர்ந்து இளைஞரின் தலையை கைப்பற்றி, அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்யப்பட்டவரின் உடல் எங்கே? கொலையாளிகள் எதற்காக அவரின் தலையை காவல் நிலையத்தில் வீசிச் சென்றனர் விசாரணை நடத்தி வந்தனர்.
உடலை கண்டுபிடித்த போலீஸ்
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள ஏரி ஒன்றில் இளைஞரின் உடல் தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி மருத்துவமனைக்கு கடலூர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசப்பட்ட தலையை அனுப்பி வைத்த போலீசார், புதுச்சேரி போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியை சேர்ந்தவர்
அப்போது கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரி பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்த சுவேதன் என்பதும், அவரை அவரது நண்பர்களே வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது. கொலை செய்யப்பட்ட சுவேதனும், அவரது நண்பர்களான வினோத், சர்மா, தாஸ் ஆகிய நால்வரும் அப்பகுதில் சிறு சிறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சுவேதனை பிடித்து விசாரித்தனர்.
காட்டிக்கொடுத்த சுவேதன்
அப்போது சுவேதன் மற்ற குற்றவாளிகளை அடையாளம் காட்டினால், அவரை விட்டுவிடுவதாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து, வினோத், சர்மா, தாஸ் ஆகிய மூவரையும் போலீசாருக்கு சுவேதன் அடையாளம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
ஆத்திரத்தில் இருந்த நண்பர்கள்
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சுவேதனை போட்டுத்தள்ள திட்டம் தீட்டினர். அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், சுவேதனை பாகூர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் அவரின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் வீசிச்சென்றுள்ளனர்.
நண்பர்கள் உள்ள சிறை
இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த வினோத், தாஸ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் எப்படியும் போலீஸிடம் மாட்டிவிடுவோம் என தெரியும் என்று கூறியுள்ளனர். ஆகையால் தங்களின் நண்பர்கள் உள்ள கடலூர் சிறைக்கு செல்ல கடலூர் மாவட்ட காவல்நிலையத்தில் தலையை வீசியதாக தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு வலை
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கொலைக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டிய ஷர்மாவை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸிடம் போட்டுக் கொடுத்ததால் நண்பர்களே சேர்ந்து தலையை துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.