நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு- கோவையில் திரண்ட மாணவர்கள் கைது
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை வஉசி மைதானத்தில் போராடிய மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கோவை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் போராடிய மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

101 வது நாளாக நெடுவாசலில் கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை வஉசி மைதானத்தில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் தங்களின் பணிகளை நிறுத்த வேண்டும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வஉசி மைதானத்தையே மாணவர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதேபோல நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவும் மாணவர்கள் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் திரண்டதை அறிந்த போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். வெளியேற மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications