குட்கா விற்க லஞ்சம் பெற்ற அமைச்சர் அதிமுக விரோதி.. கே.பி. முனுசாமி ‘பொளேர்’
போதை பொருள் விற்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிக்கி இருக்கும் அமைச்சர் அதிமுகவின் விரோதி. அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பவர் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர் என்று கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை: குட்கா விற்க லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எடப்பாடி அணியில் உள்ள புகழேந்தி, தம்பிதுரை, ஜெயக்குமார் ஆகிய மூவரும் மூன்று அணிகளாக உள்ளனர். இவர்கள் மூவரும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள். கட்சி தொண்டர்களிடையேயும் இவர்களுக்கு வரவேற்பு கிடையாது.
மூன்று அணி
இப்படிப்பட்டவர்கள், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி அணி, தினகரன் அணி, சசிகலா அணி என அந்தப் பக்கம் 3 அணிகள் இருக்கின்றன. எங்கள் பக்கம் ஒரே அணிதான் இருக்கிறது
கோரிக்கை நிறைவேறினால் இணைப்பு
ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும். இந்த இயக்கத்தை அழிக்கக் கூடிய சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும். இந்த 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் அவர்களுடன் இணைவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
பதவி போனால் ஓடி வருவார்கள்
நாங்கள் நீண்ட காலமாக அமைப்பில் இருக்கிறவர்கள். நாங்கள் பதவிக்காக இங்கு இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு பதவி போய்விட்டால் ஓபிஎஸ் பக்கம் வந்துவிடுவார்கள். அப்போது இணைப்பு என்பதே கிடையாது. ஒரே இயக்கமாக தானாக மாறிவிடும்.
குட்கா விற்க லஞ்சம்
குட்கா போதைப் பொருள் விவகாரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் ஈடுபட்ட அமைச்சர் அதிமுகவின் விரோதி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவர்கள்தான் உண்மையான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களாக இருக்க முடியும்.