கனிமொழிக்கு சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து
2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழிக்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழிக்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

சுமார் 6 ஆண்டுகள் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்காததால் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கனிமொழிக்கு திமுக, காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சசிகலா உறவினர் கிருஷ்ணப்பிரியாவும் கனிமொழிக்கு வாழ்த்துகளை தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஒரு பெண்ணாக , ஒரு தாயாக, கனிமொழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்தவுடன் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்தார் என்றும் எங்கள் முதல் எதிரி திமுகதான் என்றும் சசிகலா கூறியிருந்த நிலையில் அவரது உறவினர் கிருஷ்ணப்பிரியா இதுபோல் வாழ்த்து செய்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல் டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications