கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு: குமரியில் விஞ்ஞானிகள் ரகசிய ஆலோசனை

கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முதலாவது அணுஉலையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.
படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரித்து தற்போது 410 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது அணுஉலையில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மட்டுமே தற்போது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அந்த அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் போது, அதற்கு தகுந்த பாதுகாப்பு உள்ளதா? என்று சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகளும் நேரில் பார்த்து ஆய்வு செய்வது வழக்கம். இதற்கான ஆய்வு கூட்டத்தை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் கூட்டியது.
முன்னதாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைமை விஞ்ஞானி பஜாஜ் நேற்று கூடங்குளம் சென்று அங்குள்ள ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் குமரியில் நடந்த சர்வதேச அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய விஞ்ஞானிகளுடன், கூடங்குளம் அணுசக்தி நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்று விளக்கி கூறினார்.
இந்த ஆய்வு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் மைக்கல் நேரோவ் (ரஷ்யா) குரோமா (உக்ரைன்), சாகன்(குரோஷியா) உள்பட 15 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பின் சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழுவினர் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்கள். இவர்கள் ஆய்வில் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டு, சான்று அளித்தால் மட்டுமே இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கும்.
இதற்காக கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இன்று அணுமின் நிலையத்தில் தயார் நிலையில் உள்ளனர். அணுமின் நிலைய பகுதிகளிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications