குலசேகரன்பட்டினம் தசரா விழா: குவிந்த பக்தர்கள் - நாளை சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நாளை இரவில் நடக்கிறது. இதனைக்காண பல்லாயிக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பத்து நாட்கள் தசரா பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகம் முழுவதுதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி உலா செல்கிறார்.
மகிஷாசூரசம்ஹாரம்
நாளை விழாவின் சிகர நாள் ஆகும். நாளை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம், பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடக்கிறது.
காளி வேடம்
தசரா விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூல் செய்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் செலுத்துவார்கள்.
கலைநிகழ்ச்சிகள்
வேடம் அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்து, காணிக்கை வசூல் செய்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு சார்பில் கரகாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள்.
விடிய விடிய திருவிழா
இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை இரவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் அனைத்து தசரா குழுவினரும் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விடிய, விடிய கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.
குவிந்த பக்தர்கள்
தசரா திருவிழாவையொட்டி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் திரண்டு, சூரசம்ஹாரத்தை காண திரண்டுள்ளனர்.