மீனவர் வீட்டில் 23 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: கன்னியாகுமரி அருகே பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே மீனவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் உட்பட 23 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே புதுக்கடை பகுதியுள்ள ராமன்துறை மீனவக் கிராமத்தில் உள்ள மீனவர்கள், கடந்த லோக்சபாத் தேர்தலுக்குப் பின்னர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களிடையே கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவின்போது பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் மீது புதுக்கடை போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ததேயூஸ் (55) என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, குளச்சல் ஏ.எஸ்.பி. கங்காதர் தலைமையிலான போலீசார் ததேயூஸ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 10 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 13 குப்பி வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

போலீஸ் வருவது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த ததேயூஸ் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
இதுதொடர்பாக, பீட்டர் மகன் ஜெரோம் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications