கும்பகோணம் மகாமக குளத்தில் எத்தனை தீர்த்தங்கள் இருக்கு தெரியுமா?
கும்பகோணம்: தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட வரைபடத்துடன் மகாமகக் குளத்தின் தீர்த்தங்கள் பற்றிய அரிய கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மகாமக குளத்தில் எத்தனை தீர்த்தங்கள் உள்ளன என்று கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக விழாவில் பங்கேற்று புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகை தருவார்கள். மகாமகம் குளத்தில் மகாமகம் தினத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மகாமக திருவிழாவின்போது குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கிணறு போன்ற அமைப்பில் உள்ள நீரை மக்கள் மீது தெளித்து புனித நீராடும் நிகழ்வு நடக்கிறது. கிணறு போன்ற அமைப்பிற்கும் அருகே அந்தந்த தீர்த்தத்தின் பெயர்கள் குறிக்கப்பட்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமக நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் போது 20 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பேறு கிடைத்து பாவங்கள் தொலைவதாக ஐதீகம். இந்த மகாமக நிகழ்வுகள் குறித்து தஞ்சையைச் சேர்ந்த குடவாயில் பாலசுப்ரமணியன் செய்த கல்வெட்டு ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.
மகாமகம் குறித்து பண்டைய நூல்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் தற்போது குறிப்பிடப்படும் தீர்த்தக் கிணறுகளில் உள்ள பெயர்களுக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
கல்வெட்டுக்கள்
மன்னர்கள் காலத்தில் போற்றப்பட்ட இங்குள்ள 20 தீர்த்தங்கள் எவை என்பது பற்றி குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு கல்வெட்டுப்
பலகையில் குளத்தின் வரைபடத்தை காட்டி 16 சிவாலயங்களையும் குறிப்பிட்டு அவை அருகே உள்ள ஒவ்வொரு படித்துறையும் ஒரு தீர்த்தம் எனக்
குறிப்பிட அங்குள்ள சமஸ்கிருத எண்களைக் கல்வெட்டாக எழுதி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். கல்வெட்டில் காணப்படும் இந்த குளத்தின் வரைபடத்திற்கு மேலாக ‘மகாமக தடாகஸ்த தீர்த்தானி' என்ற தலைப்பு எழுதப்பெற்று அதற்குக் கீழாக 20 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 தீர்த்தங்கள்
அதற்குக் கீழாக 1.நவகன்யா தீர்த்தம், 2. இந்திர தீர்த்தம், 3.அக்னிதீர்த்தம், 4.யம தீர்த்தம், 5.நிருதி தீர்த்தம், 6.வருணதேவ தீர்த்தம், 7.வாயு தீர்த்தம், 8.பிரம்ம தீர்த்தம், 9.குபேர தீர்த்தம், 10. ஈசான தீர்த்தம், 11.மத்யே 66 கோடி தீர்த்தம், 12.கங்கா தீர்த்தம், 14.நர்மதா தீர்த்தம், 15. ஸரஸ்வதீ தீர்த்தம், 16.கோதாவரி தீர்த்தம், 17.காவேரி தீர்த்தம், 18.கன்யா தீர்த்தம், 19.ஷீரநதி தீர்த்தம், 20. ஸரயூநதி தீர்த்தம் என்று வரைபடத்திலுள்ள எண்களுக்குரிய தீர்த்தங்களின் பெயர்கள் காணப்படுகிறது.
வரைபட குறிப்புகள்
வரைபடத்தில் கிழக்குத்திசை, அபிமுகேஸ்வரம், விஸ்வநாதம்(காசி விசுவநாதர் கோயில்) வடகரையில் அரச மரம் உள்ள இடம் போன்ற குறிப்புகளும் காணப்படுகிறது. இங்கு பாலாற்றை ஷீரநதி எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு அம்சமாகும். இந்த வரைபடத்தையும், குறிப்புகளையும் கல்லில் பொறிக்கச் செய்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த குரு ராஜாச்சாரியர் என்று குறிக்கப் பெற்றுள்ளது.
படித்துறைகள்
இவர் கும்பகோணத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகளின் பூர்வாசிரம சகோதரர் என்பது தெரியவருகிறது. குளத்தினுள் காணப்படும் கிணறுகள் தான் குறிப்பிட்ட தீர்த்தங்கள் எனக் கருதுவது தவறு. கங்கை நதிக்கரையில் காசியில் இருப்பது போன்று இங்கும் படித்துறைகள் இருக்கும் இடங்களே 19 தீர்த்தங்கள் ஆகும். குளத்தின் நடுவில் 66 கோடி தீர்த்தம் எனக் குறிப்பிடும் தீர்த்தம் மட்டுமே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.