தில் இருந்தா நேரா பேசு... என்னை சீண்டினால் நான் புலியா மாறுவேன்: குஷ்பு
திருப்பூர்: நான் பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். என்னை தேவையில்லாமல் சீண்டினால் நான் புலியாக மாறிவிடுவேன்" என காங்கிரஸ் கட்சியின் மகளிரணி செயலாளர் ஹசீனா சையத்துக்கு
எதிராய் ஆவேச குரல் கொடுத்துள்ளார் குஷ்பு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3வது கொங்கு மண்டல மாநாடு திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு,
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை.
நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.
ஆனால், ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும்
பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன் என்று ஆவேசம் பொங்க கூறினார்.
சத்தியமூர்த்தி பவன்
கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் ஓஹோ என வளர்ந்து வருகிறது. நான் 30 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன். எனக்கு சத்யமூர்த்தி பவன் எங்கே இருக்கிறது என தெரியாமல்
இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறது.
அடையாளம்
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. இந்த ஒராண்டில்தான் சத்யமுர்த்தி பவன் செயல்படுகிறது. தொண்டர்களும் வந்து செல்கிறார்கள் என்று கூறினார் குஷ்பு.
கார்த்தி கருத்து
நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் கருத்து கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, "ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை" என கருத்து தெரிவித்திருந்தார்.
ஹசீனா அறிக்கை
குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.''காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால்
குஷ்புவுக்கு நல்லது என அவர் கூறியிருந்தார்.
குஷ்பு பதிலடி
இதற்கு பதிலளித்த குஷ்பு, என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தில்லாக பதிலளித்தார். இந்நிலையில், திருப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அவர், தேவையில்லாமல் சீண்டினால் நான் புலியாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.