கணவர் கொலைக்கு சக்களத்தியை பழித் தீர்க்க ரூம் போட்டு சதி... பெண் தாதா உள்பட 14 பேர் கைது
புதுவையில் கணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
புதுவை: புதுவையில் கணவரை கொன்றவர்களை பழி வாங்க ஹோட்டலில் ரூம் போட்டு சதி திட்டம் தீட்டிய புதுவை பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்காலை அடுத்த திருபட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரியாக இருந்தார். பின்னர் இவர் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வினோதா ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு காரைக்காலில் பைக்கில் சென்றபோது ராமுவையும், எழிலரசியையும் கூலிப்படை வைத்து கொல்ல திட்டமிட்டார். அதன்படி கூலிப்படையினர் வெட்டியதில் ராமு இறந்துவிட்டார். ஆனால் எழிலரசி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சபதம் எடுத்த எழிலரசி
கணவரை கொலை செய்தவர்களை பழி வாங்க திட்டமிட்டார் எழிலரசி. இதை அறிந்த வினோதா தனது உயிருக்கு ஆபத்து என்பதால் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு காரைக்காலில் இருந்து சென்னைக்கு வினோதா காரில் சென்றபோது சீர்காழி அருகே வழிமறிக்கப்பட்டு வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் கொலை
ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி பெண் தாதாவாக உருவெடுத்தார். கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரையும் கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது திருமண மண்டபத்தை பார்வையிட வந்த வி.எம்.சி.சிவக்குமாரை காரில் வந்த ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றது.
10 மாதம் சிறை தண்டனை
இதையடுத்து எழிலரசி மீண்டும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் 10 மாதம் அடைக்கப்பட்டார். மீண்டும் நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். முன்னாள் அமைச்சரை கொன்றதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனபதால் அடிக்கடி இடத்தை மாற்றி கொண்டே இருந்தார். புதுவையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த எழிலரசி யாரையோ கொல்ல சதி திட்டம் தீட்டுவதாக போலீஸாருக்கு தெரிந்தது.
மீண்டும் சிறை
சம்பவ இடம் விரைந்த போலீஸார் எழிலரசியையும் அவருடன் இருந்த 13 ரவுடிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது.
முதல் மனைவியின் உறவினர்
கைதானவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள்கள், கத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அனைவரும் காலாப்பட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் பலர் இந்த சதி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.