கணவருக்கு மனநல பாதிப்பு: மனமுடைந்த மனைவி மகளைக் கொன்று தானும் தற்கொலை
கன்னியாகுமரி: கன்யாகுமரி அருகே, கணவரின் மனநிலை பாதிப்பால் மனமுடைந்த மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கொற்றியோடு, நெக்கட்டான் பாறை பகுதியை சேர்ந்த விவசாயி பிரசாத் (வயது 40). இவரது மனைவி ராதா (35). இவர்களுக்கு கணேசன் (17) என்ற மகனும், பவித்திரா (16) என்ற மகளும் இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு உண்டானதிற்குப் பிறகு, பிரசாத்திற்கு திடீரென மனநல பாதிப்பு உண்டானதாம். கணாவருக்கு சிகிச்சைகள் அளிக்கப் பட்டும் பலனில்லாமல் போகவே ராதா மன முடைந்து காணப்பட்டுள்ளார்.
வாழை பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்த பிரசாத், மனநிலை பாதிப்பால் எப்போதும் தனியாகவே வீட்டில் புலம்பிக்கொண்டே இருந்து வந்துள்ளார். இது மென்மேலும் ராதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த, மனமுடைந்த ராதா தனது மகள் பவித்ராவுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வீட்டிற்கு வந்த கணேசன் சமையலறையில் தாயும், தங்கையும் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தாய், மகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.