ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண் ஊழியர்!!
ஜெயங்கொண்டம் : நகராட்சி ஆணையரிடம் விடுமுறை கேட்ட விவகாரத்தில் ஜெயங்கொண்டத்தில் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சரஸ்வதி. நகராட்சி அலுவலகத்தின் ஆணையர் அறைக்குள் நேற்று பிற்பகலில் வேகமாக நுழைந்த இவர் திடீரென்று தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் தண்ணீர் கொண்டுவந்து சரஸ்வதி மீது ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீக்குளிப்பு சம்பவத்துக்கு சரஸ்வதி விடுப்பு கேட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
நகராட்சி ஆணையரிடம் கடந்த 2-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை சரஸ்வதி விடுப்பு கோரி கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவ்வளவு நாள்விடுமுறை அளிக்க முடியாது என்று ஆணையர் கூறியிருக்கிறார். அத்துடன் மேலாளரை பார்க்குமாறும் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் சரஸ்வதி சில நாட்கள் விடுப்பு எடுத்ததாக தெரிகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பென்ட் செய்து தபாலில் வீட்டுக்கு ஆர்டரை அனுப்பியுள்ளது. அதை சரஸ்வதி வாங்கவில்லை. இதனால் அவரது வீட்டில் சஸ்பென்ட் ஆர்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில்தான் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சரஸ்வதி தீக்குளிக்க முயற்சித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.