கோவை பெண் கொலை: தலைமறைவான வழக்கறிஞர் தம்பதியினர் வெளிநாட்டிற்கு தப்பினாரா?
கோவை: மோசடி வழக்கில் மனைவியைக் காப்பாற்ற பெண்ணை கொலை செய்தது தொடர்பான வழக்கில், வழக்கறிஞர் தம்பதியைப் பிடிக்க தனிப்படை போலீஸார் வெளிமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். அதே நேரத்தில் சொத்திற்காக மற்றொரு பெண் மாயமான வழக்கில் வழக்கறிஞர் ராஜவேலுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் கொலை வழக்கில் போலீஸார் நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணிவேலுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க மணிவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதில் மணிவேலுக்குச் சொந்தமான நிலம் வழக்கறிஞர் ராஜவேலுவின் மனைவி மோகனா பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ராஜவேல் மற்றும் அவரது மனைவி மோகனா குறித்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
எம்.எல்.எம் மோசடி வழக்கு
ஒடிசா மாநிலத்தில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் மூலம் ரூ. 12 கோடி அளவிற்கு மோசடி செய்தது தொடர்பாக, மோகனா தேடப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 2011, டிசம்பர் 11-ஆம் தேதி மோகனா இறந்ததாக இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
பின்னர் அவரது கணவர் வழக்கறிஞர் ராஜவேல் தனது மனைவி இறந்ததாகப் பெறப்பட்ட இறப்புச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து உயிரோடு இருக்கும்போது எதற்காக போலியாகச் சான்றிதழ் பெறப்பட்டது? எனில், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
மாயமான அம்மாசை
இந்நிலையில் கடந்த 2011, டிசம்பர் 11-ஆம் தேதி வழக்குரைஞர் ராஜவேலுவை சந்திப்பதாகச் சென்ற அம்மாசை என்ற பெண் காணாமல் போனதாக ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதில் மோசடி வழக்கில் சிக்கியிருந்த மனைவி மோகனாவைக் காப்பாற்ற தன்னைச் சந்திக்க வந்த அம்மாசையை, தனது வாடிக்கையாளர்களரான பொன்ராஜ், ஓட்டுநர் பழனிசாமியுடன் இணைந்து அம்மாசையை ராஜவேலு கொலை செய்தது தெரியவந்தது.
இறப்புச் சான்றிதழ்
மேலும் மனைவி மோகனா இறந்ததாகக் கூறி ஆவணங்கள் தயாரித்து, மின் மயானத்தில் அம்மாசையின் உடலை எரித்துள்ளனர். இதையடுத்து மோகனா மீதான மோசடி வழக்கு விசாரணையை ஒடிசா போலீஸார் கைவிட்டனர்.
இந்நிலையில் மணிவேலுக்குச் சொந்தமான நிலத்தை மனைவியின் பெயருக்கு மாற்ற அவரின் இறப்புச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் வழக்குரைஞர் ராஜவேல் போலீசில் சிக்கியுள்ளார்.
மலேசியாவுக்கு தப்பியோட்டமா?
இந்நிலையில் மோகனா மலேசியா நாட்டிற்குத் தப்பியிருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜவேல், அவரது மனைவி மோகனாவைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சென்னை, பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
நிலமோடியால் கொலை
இந்த நிலையில் காணாமல் போன விசாலட்சி வழக்கிலும் ராஜவேலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான விசாலாட்சிக்குச் சொந்தமாக 98 சென்ட் நிலம் உள்ளது. திருமணமாகாத விசாலாட்சி தனக்குச் சொந்தமான நிலத்தை அவரது சகோதரி மகளுக்கு உயில் எழுதிக் கொடுத்ததாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் கொலை வழக்கில் கைதான சந்திரபோஸ், விசாலாட்சியின் நிலத்தை சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை வழக்கறிஞர் ராஜவேல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாயமாகி உள்ள விசாலாட்சியும் சொத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications