சமையல் எரிவாயு மானியத்தைப் பெற... மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
சென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி சமையல் எரிவாயு மானிய திட்டம், தற்போது நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில், வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமையல் எரிவாயு உருளைக்கான நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, சென்னையிலுள்ள இந்திய எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி, "மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக அரசின் மானியத் தொகை செலுத்தப்படும். மாறாக, வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை வாங்கும் போது, ழுழுத் தொகையை வழங்க வேண்டும்.
அதன் பின்னர், எரிவாயு உருளை வாங்கிய 3 நாள்களுக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை உள்ளவர்களும், இல்லாதவர்களும் பயன் பெறலாம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உதவிகளையும் முகவர்கள் மேற்கொள்ளுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன என்றார்.
நுகர்வோர்கள் நேரடி மானியம் பெறுவதற்கான படிவத்தை முகவர்கள் மூலம் பெறலாம். இதற்கான தகுந்த உத்தரவுகளை எண்ணெய் நிறுவனங்கள் பிறப்பித்துள்ளன. படிவங்களை நுகர்வோர்களுக்கு வழங்க யாராவது பணம் கேட்டால், அதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications