டெல்லியில் மர்ம மரணமடைந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் உடல் நல்லடக்கம்
டெல்லியில் மர்ம மரணமடைந்த தமிழக மாணவர் சரத் பிரபுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர்: டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடல் திருப்பூரில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு. இவர் டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி எம்.எஸ். படித்து வந்தார். கல்லூரிக்கு பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்த அவர் புதன்காலை காலை அவரது அறையில் சடலமாக காணப்பட்டார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சரத்பிரபுவின் உடலை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவரது தந்தை செல்வமணி புதன்கிழமை மதியம் டெல்லி சென்றார். அவரது ஒப்புதலின் பேரில் சரத்பிரபுவின் உடலுக்கு வியாழக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக சரத்பிரபுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பாரப்பாளையம் அருகே கருவம்பாளையம் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.