தேமுதிகவுடன் கை கோர்க்கும் கம்யூனிஸ்டுகள்... வி.சி.யை வளைக்கும் திமுக... நடுத்தெருவில் மதிமுக?
சென்னை: தேமுதிக தலைமையிலான கூட்டணியில் இணைந்துவிடலாம் என இடதுசாரி கட்சிகள் விரும்புவதால் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணி உடையக் கூடும் என தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக- காங்கிரஸ், பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை அழைப்பு விடுத்தன. ஆனால் தேமுதிகவோ தனித்துப் போட்டி; தங்களது தலைமையிலேயே கூட்டணி என திட்டவட்டமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி இதர சிறிய கட்சிகளை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பாஜகவோ எப்படியும் தேமுதிகவை தங்களது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைத்துவிட வேண்டும் என முயற்சித்து வருகிறது.

போட்டி போட்டு வரவேற்பு
ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவின் நிலைப்பாடு பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. இத்தனைக்கும் தேமுதிக தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை போட்டி போட்டுக் கொண்டு வரவேற்றனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.

கம்யூனிஸ்டுகள் நிலை
தற்போது மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வரட்டும் என்கிற தொணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூறி வருகின்றனர். ஆனால் இடதுசாரித் தலைவர்களோ தேமுதிக தலைமையிலான கூட்டணியில் உடனே இணைந்துவிடுவோம்... அப்போதுதான் பாஜக- தேமுதிக கூட்டணியைத் தடுக்க முடியும் என கூறி வருகின்றனர்.

வி.சி.யை வளைக்கும் திமுக
இதனால் மக்கள் நலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விடுதலைச் சிறுத்தைகளை மீண்டும் கூட்டணியில் இணைக்க திமுக தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதிமுக நிலைப்பாடு
மதிமுகவைப் பொறுத்தவரையில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருக்கிறார்; இக்கூட்டணி நீடித்தால்தான் 4 கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட முடியும் என கருதுகிறது. ஆனால் தேமுதிக தலைமையிலான கூட்டணிக்குப் போனால் அக்கட்சிதான் அதிக இடங்களில் போட்டியிடும் நிலை ஏற்படும். மதிமுக குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டியது இருக்கும் என்பதால் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ, தேமுதிக தலைமையிலான கூட்டணிக்கு போக விரும்பவில்லை என கூறப்படுகிறது.

உடையும்?
இப்படி மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கின்றன. தேமுதிக அணிக்கு இடதுசாரிகளும், திமுக அணிக்கு விடுதலை சிறுத்தைகளும் போனால் மதிமுக மட்டும் நடுத்தெருவில் தனியாக நிற்க வேண்டியது இருக்கும் நிலை உருவாகும். அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணி உடையவே உடையாது என தொடர்ந்து வைகோ மட்டுமே கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications