அந்தமானை தாக்கியது லெஹர் புயல்: 28ம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கும்
சென்னை: லெஹர் புயல் நேற்று இரவு 11.15 மணி அளவில் அந்தமானை தாக்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை தான் ஹெலன் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்நிலையில் அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது நேற்று காலை 5.30 மணிக்கு வலுவடைந்து புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு லெஹர் என்று பெயர் வைக்கப்பட்டது.
நேற்று மாலை அந்தமானின் தலைநகரமான போர்ட்பிளேருக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது லெஹர். லெஹர் நேற்று இரவு 11.15 மணி அளவில் அந்தமானை தாக்கியது. அப்போது மணிக்கு 110 கிமீ வேகத்தில் சுறாவளி காற்று வீசியது. முன்னதாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லெஹர் புயல் அந்தமானை கடந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதி நோக்கி வந்து மேற்கு மற்று வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் வரும் 28ம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும், கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
அந்தமான் அருகே உருவாகிய லெஹர் புயல் அந்தமானை கடந்து ஆந்திராவை நோக்கி நகரும். தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வான்வெளியின் மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். மேலும் வட மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.