உங்க ஏரியால லைட் எரியலையா? இனி உள்ளாட்சிகளை கவனிக்கும் தனி அதிகாரிகளை கேளுங்க!
சென்னை : இதுநாள்வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகித்து வந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகளின் கீழ் வருகிறது. சாலைகள் பராமரிப்பது, தெருவிளக்குகள் வசதி செய்வது என உள்ளாட்சிகளில் செய்ய வேண்டிய வேலைகளை இந்த அதிகாரிகள்தான் கவனிப்பார்கள்.
பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் எல்லாம் நேற்றுடன் தங்களின் கடமைகளை முடித்துக்கொண்டனர். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தனி அதிகாரிகளின் வேலைகள்
கிராம ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பது, பராமரிப்பது, சீரமைப்பது, பொது சாலைகள், பொது இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது, சாலைகளை சுத்தமாக பராமரிப்பது, பொது கழிப்பிடங்கள், சுடுகாடுகளை தூய்மையாகப் பராமரிப்பது, பொது மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தும் நீர் ஆதாரங்களை பராமரிப்பது போன்ற பணிகளை தனி அதிகாரிகள் கண்காணிப்பர்.
மாநகராட்சிகள்
தெரு விளக்குகள், குடிநீர் வழங்கல் பணிகள் (சென்னை மாநகராட்சியில் பெருநகர குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்கிறது), பொது கழிப்பிடங்கள், சாலைகளைச் சுத்தமாக பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஆணையாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து அந்தப் பணிகளை ஒருங்கிணைப்பர்.
நகராட்சிகள்
குடிநீர் வழங்கல், சாலை விளக்குகள், பொது கழிப்பிடங்கள், பொது கழிவுநீரகற்றகங்கள் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன், அதனைப் பராமரிப்பது, தெருக்களைச் சுத்தமாகப் பராமரிப்பது, குப்பைகளை அகற்றுவது, சாலைகளில் மரங்களை நடுவது, பராமரிப்பது போன்ற பணிகளை தனி அதிகாரிகள் கண்காணித்து பணிகளை முறைப்படுத்துவர்.
ஊராட்சி ஒன்றியங்கள்
ஊராட்சி ஒன்றியங்களில் மருந்தகங்களை ஏற்படுத்துவது, கிராமப்புற மருத்துவர்களுக்கு சம்பளம்-படிகள் போன்றவற்றை அளிப்பது, கர்ப்பிணி-குழந்தைகள் நல மையங்கள், ஏழைகள், கைவிடப்பட்டோருக்கு இல்லங்கள் கட்டுவது, தொடக்கப் பள்ளிகளை புதிதாக கட்டுவது, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியங்களை அளிப்பது, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கண்காட்சிகள், திருவிழாக்களைக் கட்டுப்படுத்துவது, பிறப்பு-இறப்பு பதிவேடுகளைப் பராமரிப்பது, வேளாண்மை, கால்நடைகள் போன்றவற்றை மேம்படுத்துவது போன்ற பணிகளை கண்காணித்து அவற்றை தனி அதிகாரிகள் செயல்படுத்துவர்.
கிராம பஞ்சாயத்துக்கள்
கிராம பஞ்சாயத்துகளில் சாலையோரங்களில் மரங்கள் நடுவது, பராமரிப்பது, பொதுவிடங்களில் மின்விளக்கு வசதி, பொது சந்தைகளைத் திறந்து பராமரிப்பது, கிராமங்களில் கண்காட்சிகள்,திருவிழாக்களை நடத்துவது, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை பராமரிப்பது, இறைச்சி கூடங்களைத் திறந்து பராமரிப்பது, படிப்பகங்களை சரியான முறையில் பராமரிப்பது, மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் போன்ற அம்சங்களை ஏற்படுத்தி பராமரிப்பது போன்ற பணிகளை தனி அதிகாரிகள் கண்காணித்துச் செயல்படுத்துவர்.
மக்களே உங்க ஏரியாவில் லைட் எரியா விட்டாலோ, குப்பை எடுக்கா விட்டாலே இனி உள்ளாட்சிகளை கவனிக்கும் தனி அதிகாரிகளை நாடுங்கள்.