உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
திமுக தொடர்ந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் தொடர்பான அரசாணைகள் அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வெளியிட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்காக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கருத்து கூறியுள்ள வழக்கறிஞர் வில்சன், செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மறுநாளே அதிகாலை 12.15 மணி நேரம் என குறிப்பிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
எந்தெந்த வார்டுகள் யார் யாருக்கு ஒதுக்கீடு என்பதை முறையாக அறிவிக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாயத்து சட்டம் 24-வது பிரிவை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததும் தேர்தல் ஆணையத்தின் தவறாகும் என வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.