தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் சனிக்கிழமை முடிவடைந்தது. இத் தேர்தலில் போட்டியிட 1318 பேர் மனுக்களை அளித்துள்ளனர். இன்று இந்த மனுக்களை ஏற்பது தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது வேட்பாளர், அவரது தேர்தல் முகவர், வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களில் ஒருவர், அவரால் அதிகாரம் வழங்கப்பட்டவர் ஆகியோர் பங்கேற்கலாம். வேட்பாளர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வேட்பு மனுவில் ஏதேனும் விவரங்களைத் தராமல் விட்டிருந்தாலோ, வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ அதை நிவர்த்தி செய்வதற்கு ஏப்ரல் 9-ந் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.
வேட்பு மனுக்கள் உரிய விதிகளின் படி தாக்கல் செய்யவில்லை என்றாலோ, ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தாலோ அவை நிராகரிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஏப்ரல் 9ந் தேதி கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications