ஓ.பிஎஸ் தேர்தல் வரும்னு பொதுவா சொல்லியிருப்பாரு.... பம்மி பம்மி பேசும் தம்பிதுரை
அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதை கூறும் வகையிலேயே தேர்தல் வரலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை : எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா விருப்பப்படி அதிமுகவினர் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகள் என்பது சாதாரண விஷயம் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலையில்லாததால் இதனை பெரிதுபடுத்துவதாக அவர் கூறினார். ஜெயலலிதாவின் ஆசியுடன் 4 ஆண்டுகால ஆட்சி நிறைவு செய்யப்படும் என்றும், அப்படியே தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வரும் என்ற நோக்கத்தில் சொல்லியிருக்க மாட்டார், எப்போதும் நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற ரீதியில் சொல்லியிருப்பார் என்றே நம்புவதாக அந்தர் பல்ட்டியடித்து ஓ.பிஎஸ்க்கு ஆதரவாக பேசிச் சென்றார் தம்பிதுரை.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமிக்கு ஆலோசனை கூறிய தம்பிதுரை தான் முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை ஏற்று அதிமுக இரு அணிகள் இணையத் தயார் என்று இணைப்புக்கான கிரீன் சிக்னலை காட்டினார். ஆனால் அதன் பின் டெல்லி சென்று தினகரன் கைது, இருஅணிகள் இணையாமல் போன சூழலில் இன்று தம்பிதுரை சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.