ரூபாய் 500 கோடி பணத்துடன் ரிப்பேராகி நின்ற கண்டெயினர் லாரி... மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பல கோடி பணத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து கண்டெய்னர் லாரிகள் சாலைகளில் அதிரடியாக நின்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திருப்பூர் அருகே ரூ. 570 கோடி பணத்துடன் மூன்று கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டன. அந்தப் பணம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து, அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 700 கோடி பணத்துடன் விழுப்புரம் அருகே நின்ற கண்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. 5 தனியார் வங்கிக்கு சொந்தமான அப்பணம் பின்னர் சென்னக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று நடுவழியில் பழுதாகி நின்று கொண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இந்தப் பணம் மைசூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் லாரி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சோதனையில் ரூபாய் 500 கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து செய்திகளில் கண்டெய்னர் லாரி குறித்த செய்திகள் அடிபட்டு வருவதால், இந்த லாரிகளை வேடிக்கைப் பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால், அதுவரை அமைதியாக இருந்த சி.ஐ.எஸ்.எப். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான 10 கமாண்டோ போலீசார் 2 கண்டெய்னர் லாரிகளையும் சுற்றி நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாரிக்கு திருமங்கலம் டிஎஸ்பி சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லாரியின் பழுதை நீக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications