தீவிரவாத தாக்குதலை விட காதல் கொலைகள் அதிகம் ... தமிழகத்திற்கு 4வது இடம்
நாட்டில் காதல் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.
சென்னை: தீவிரவாத தாக்குதலை விட நாட்டில் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவது, காதலன் காதலியை கொலை செய்வது என காதலுக்காக அரங்கேறும் கொலைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 20,000 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்தனர். ஆனால், பயங்கரவாதத்தால் உயிரிழப்பவர்களைவிட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கொலை, தற்கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதலைவிட, காதலால் ஏற்படுகின்ற மரணங்கள்தான் அதிகளவில் நடைபெறுகின்றன என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

காதல் கொலைகள்
காதலிக்க மறுத்த பெண் கொலை, சாதி மாறி காதலித்து திருமணம் செய்தவர்கள் படுகொலை, உறவினர்கள் சம்மதிக்காத காரணத்தால் காதல் ஜோடி தற்கொலை என நாடு முழுவதும் காதல் ஜோடிகளின் மரணம் அதிகரித்து வருகிறது.

எத்தனை கொலைகள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2001ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை காதலால் 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

ஆந்திரா முதலிடம்
காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் ஆந்திராவும், இரண்டாவதாக உத்தரப்பிரதேசமும், மூன்றாவதாக மகாராஷ்டிராவும் இடம்பிடித்துள்ளன.

தமிழகம் 4வது இடம்
பெரும்பாலான காதல் கொலை, தற்கொலைகள் சாதிக் கட்டுபாடு, காரணத்தினால் நிகழ்ந்தவை என கூறப்படுகிறது. தமிழகம் இந்தப்பட்டியலில் நான்காவது இடத்தையும், மத்தியப்பிரதேசம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. காதலில் பிரிவு ஏற்படுதல், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற காரணங்களால் காதல் ஜோடிகள் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.

காதல் தற்கொலைகள்
மேற்கு வங்கத்தில் காதல் கொலைகள் குறித்த எந்தவித புள்ளி விவரமும் கிடைக்கவில்லை. காதல் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் 15,000க்கும் அதிகமான காதல் தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.












Click it and Unblock the Notifications