40 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் முடிந்தது- 887 பேர் பங்கேற்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட 40 தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தோரிடம் நடத்தப்பட்ட வேட்பாளர் நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 887 பேர் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
கடைசி நாள் வேட்பாளர் நேர்காணல் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலும், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
வடசென்னைக்கு...
வடசென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய தொகுதிகளுக்கு நேற்று காலை நேர்காணல் நடைபெற்றது. இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி, வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஷிம்லா முத்துச்சோழன் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
தயாநிதியிடம் நேர்காணல்
மத்திய சென்னை தொகுதிக்கு தயாநிதி மாறன் எம்.பி. உட்பட 16 பேர் பங்கு பெற்றனர்.
தென் சென்னைக்கு மா.சு.
தென்சென்னை தொகுதிக்கு மாலையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், வசந்தி ஸ்டான்லி எம்.பி உட்பட 26 பேர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரிக்கு 22 பேர்
புதுச்சேரி தொகுதிக்கு முன்னாள் புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன் உள்பட 22 பேரும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்துக்கு 53 பேர்
அதிகபட்சமாக காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு 53 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
887 பேர் பங்கேற்பு
தி.மு.க. சார்பில் 40 தொகுதிகளுக்கு 300 பெண்கள் உள்பட 1500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் 887 பேர் மட்டுமே நேர்காணலுக்கு வந்திருந்தனர்.