நடிகர் கஞ்சா கருப்புவுடன் போய் வேட்பு மனு தாக்கல் செய்த சினிமா கவிஞர்!
கோடம்பாக்கவாசிகள், சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் கேகே நகர் பகுதி மக்களுக்கு பரிச்சயமான கவிஞர் கிச்சனை நடத்தி வருபவரும், பாடலாசிரியருமான ஜெயங்கொண்டான் நேற்று ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஜெயங்கொண்டானின் இயற்பெயர் மகேஷ். ஊர்ப் பாசம் காரணமாக ஜெயம் கொண்டான் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

ஒரு பக்கம் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே, கேகே நகரில் உணவகம் திறந்தார். அது திரையுலகினருக்கு மிகவும் பரிச்சயமான உணவகமாகிவிட்டது. நடிகர் கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி என ஏகப்பட்ட பேர் இவருக்கு ஆதரவு தந்தனர்.
புதுப் படங்களை தியேட்டர்களில் பார்த்துவிட்டு தன் உணவகத்துக்கு வந்து அந்த டிக்கெட்டைக் காட்டினால் தள்ளுபடி, இல்லாதவர்களுக்கு உதவி என தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வந்தார்.
இப்போது தேர்தலில் களமிறங்கியுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பிருந்தே சுயேச்சை வேட்பாளராக தொகுதி முழுக்க சுற்றி வந்து வாக்கு சேகரித்து வந்தார்.

நேற்று அவர் நடிகர் கஞ்சா கருப்பு துணையுடன் ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தனக்காக இன்னும் சில நட்சத்திரங்கள் இந்தத் தொகுதியில் வாக்குச் சேகரிக்க வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜெயங்கொண்டான், என் சொந்த சம்பாத்தியத்தை வைத்து இந்தத் தொகுதி மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். எனக்கு அதிகாரமிருந்தால், இந்தத் தொகுதியை முன் மாதிரியாக்குவேன் என்றார்.












Click it and Unblock the Notifications