ஜெயலலிதாவைப் போல நீதிபதியை மாற்றச் சொல்ல மாட்டேன்: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், அவர் பேசியதாவது:
‘'என் மீது வழக்கு தொடர்ந்ததற்காகவும், பேனர் வைத்ததற்காகவும் அதிமுகவினருக்கு நன்றி சொல்கிறேன். ஜெயலலிதா மீது பிறந்த நாள் பரிசு, சொத்துக்குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளுக்கெல்லாம் இழுத்தடித்து வாய்தா வாங்கி வருகிறார்கள். அதே போல நான் வாய்தா வாங்க மாட்டேன்.
தற்போது கூட பெங்களூரில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கில், நேரில் ஆஜராக தாமதிப்பதுபோல் இல்லாமல் நாங்கள் நேரிடையாக நீதிமன்றத்தைச் சந்திப்போம்.
வழக்கறிஞரை மாற்றியதற்காகவும், நீதிபதியை மாற்றியதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஜெயலலிதா. அதேபோல நானும் தமிழக அரசிடம் கேட்கமாட்டேன் என்று கூறினார்.
திமுக ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது''என்றும் அவர் தெரிவித்தார்.