வெங்கய்யநாயுடுவுக்கு இது கூட தெரியல.. இவரு எப்படி அமைச்சரா இருக்காரு- சிரிப்பாய் சிரிக்கும் ஸ்டாலின்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் வெங்கய்ய நாயுடுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
திருவாரூர்: விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கியக் கடனை மத்திய அரசுதான் தள்ளுபடி செய்யப் வேண்டும் என்பது கூடவா மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிற்கு தெரியாது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் காட்டமாக பேசினார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
மறியல்
அந்த வகையில் திருவாரூரில் நடைபெற்றப் போராட்டத்தில் மு. க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கைதானார்கள்.
எழுச்சி
இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. திமுக மற்றும் அனைத்துக்கட்சியினரும் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது இந்தப் போராட்டத்தின் எழுச்சியை காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறினார்.
தவறான தகவல்
மேலும் ஸ்டாலின் கூறியதாவது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை வந்திருந்த போது, விவசாயிகளின் போராட்டம் பற்றி பேட்டி அளித்தார். அதில் பல தவறான தகவலை தந்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றக் கடனை தள்ளுபடி செய்வது வழக்கமல்ல என்று தவறாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
தள்ளுபடி
இந்திய பிரதமராக மன்மோகன்சிங் இருந்த போது, ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தார். வி. பி. சிங் பிரதமராக இருந்த போது, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார்.
இது கூட தெரியல..
இதெல்லாம் மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய வெங்கய்ய நாயுடுக்கு தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூட தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. அந்த அளவிற்குதான் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களால் விவசாயிகளைப் பற்றி கவலைப்பட முடியாது என்று ஸ்டாலின் கூறினார்.