அரசியலுக்கு நடுவே கொஞ்சம் விளையாட்டு... நமக்கு நாமே பயணத்தில் உற்சாக ஸ்டாலின்
விழுப்புரம்: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அரசியல் பயணத்தோடு விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விழுப்புரத்தில் இன்று காலையில் கால்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட் என இளைஞர்களுடன் உற்சாகமாக விளையாடினார்.
மு.க.ஸ்டாலின் தனது மூன்றாம் கட்ட நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப் பயணத்தை சேலத்தில் 26ம்தேதி தொடங்கினார். நேற்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சுற்றுப் பயணம் செய்த ஸ்டாலின், அங்கிருந்து சங்கராபுரம், திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம், செஞ்சி, திண்டிவனம், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, மயிலம், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார்.
இரவு விழுப்புரம் வந்த ஸ்டாலினுக்கு முத்தாம்பாளையம் பைபாஸ் சாலையில் பொன்முடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு சென்று ஓய்வு எடுத்தார்.
நடைபயிற்சி
இன்று காலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் வடக்கு ரயில்வே சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். அங்கு 15 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது ஏராளமானோர் அவருடன் நடந்து வரவே அவர்களிடம் உற்சாகமாக பேசிக்கொண்டே நடந்தார் ஸ்டாலின்.
கிரிக்கெட்
அதே மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஸ்டாலின் சிறிது நேரம் உற்சாகமாக விளையாடினார்.
கால்பந்து விளையாட்டு
அங்கு கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் கால்பந்து ஆடினார்.
இறகுப்பந்து விளையாட்டு
அங்குள்ள ரயில்வே இறகு பந்து கூடத்துக்கு சென்றார். அங்கு போக்குவரத்து கழக ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் அதிபருடன் இறகு பந்து விளையாடினார்.
பூ கொடுத்த குப்பு
விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார் ஸ்டாலின். அங்கு பூ விற்பனை செய்து கொண்டிருந்த குப்பு என்ற பெண் பூக்களை கொடுத்து வரவேற்றார்.
உழவர் சந்தையில்
உழவர் சந்தையில் உள்ள கூட்டுறவு காய்கறி அங்காடிக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்குள்ளவர்களிடம் விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.
நிறுத்தப்பட்ட பேருந்து
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட உழவர்சந்தை எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. அப்போது விராட்டிக்குப்பத்தில் இருந்து விழுப்புரம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல பஸ் வந்தது. கடந்த 3 ஆண்டு காலமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
டீ குடித்த ஸ்டாலின்
உழவர் சந்தையில் குறைகள் கேட்ட பின்பு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு காந்தி சிலை அருகே உள்ள ஒரு டீ கடைக்கு வந்தார். அங்கு அவர் பொதுமக்களுடன் சேர்ந்து டீ குடித்தார்.
வியாபாரிகளுடன் பேச்சு
பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
குறை கேட்ட ஸ்டாலின்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்ற ஸ்டாலின். அங்கு நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். இதையடுத்து விழுப்புரம் அருகே உள்ள பிடாகத்தில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் குறைகள் கேட்டார்.
அரசியலுக்கு நடுவே
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் இம்முறை அதிகம் அரசியல் பேசாமல் மக்களுடன் நெருங்கி பழகி வருகிறார் ஸ்டாலின். கடந்த முறை பயணத்தின் போது பல போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர். இம்முறை அதுபோல் எதுவும் ஏற்படக்கூடாது என்று தனது கிரியேட்டிவ் டீமிற்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.