மதுரைக்குள் நுழைய மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்... மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மதுரை : நடை பயணத்தின் போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் நடை பயணத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
இந்த நிலையில் மதுரைக்குள் நுழைய மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி .அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி தென் மாவட்டங்களில் விளம்பர வாகனங்கள் செல்வதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும், எனவே, ஸ்டாலின் வருகைக்கு மாநகர காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தடை விதிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, நமக்கு நாமே என்ற போர்வையில் வரும் மு.க. ஸ்டாலினை நெல்லை மாவட்டம் கடையநல்லூர், காசிதர்மம் உள்ளிட்ட பகுதிக்குள் உள்ளே நுழையக் கூடாது என்றும், மீறினால், ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என ஆட்சித்தலைவரிடம், முதியோர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூருக்குள் மு.க.ஸ்டாலின் நுழையத் தடைவிதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.