ரோஸ் கலர் சட்டை, ப்ளூ கலர் பேண்டுடன் ஆட்டோவில் ஃபுட்போர்ட் சென்ற ஸ்டாலின்! மக்கள் ஆரவாரம்
நாகர்கோவில்: நமக்கு நாமே என்ற பெயரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திவரும் பிரச்சாரத்தின்போது, திடீரென சாலையில் சென்ற ஆட்டோவில் ஏறி அதில் ஃபுட்போர்ட் அடித்து சுற்றியிருந்த தொண்டர்களையும், ஆட்டோ டிரைவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஸ்டாலின் மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்தி வருகிறார். நமக்கு நாமே என்ற முழக்கத்தின்கீழ், கன்னியாகுமரியில் பிரச்சார பேரணி தொடங்கியுள்ள ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார்.
பளபளக்கும் டிரஸ்
பிரச்சாரத்தின்போது வழக்கமாக கட்சி கரை வேட்டி மற்றும் வெள்ளை சட்டையுடன் காணப்படும் ஸ்டாலின் இம்முறை ஆளே மாறிவிட்டார். நீல வண்ண பேண்ட்டும், ரோஸ் கலர் சட்டையும் அணிந்து, ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து பளபளவென காட்சியளித்தார் ஸ்டாலின். பேண்ட்டுக்குள், சட்டையை இன் செய்து கொண்டு கருப்பு வண்ண கூலிங்கிளாசும் போட்டுக்கொண்டு அரசியல்வாதி என்று கூற முடியாமல், பெரிய அதிகாரி போன்ற தோற்றத்தில் ஸ்டாலின் காணப்பட்டார்.
வேனில் இருந்து இறங்கினார்
கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில், பிரச்சார வேனில் நின்றபடி, ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நூற்றுக்கணக்கான ஆட்டோக்களும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இதைப்பார்த்த ஸ்டாலின் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ஆட்டோக்களை நோக்கி நடைபோட தொடங்கினார். பாதுகாப்பு வீரர்கள் எதுவும் அறியாமல், அவரின் பின்னால் ஓடினர்.
ஆட்டோவாலா
அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டு அப்படியே மெதுவாக செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த ஸ்டாலினும், ஆட்டோவை ஓட்ட ஸ்டாலின் ஆட்டோவின் பக்கவாட்டில் நின்றபடியே பயணித்துக்கொண்டு, மக்களை நோக்கி கையசைத்தார். இதன்பிறகு ஆட்டோ டிரைவர், ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
மாற்றம் அவசியம்
அரசியல்வாதி என்ற படாடோபம் இன்றி, மக்களோடு அதிலும் அடித்தட்டு மக்களான ஆட்டோ டிரைவரோடு கைகோர்த்து ஸ்டாலின் பயணித்து பிரச்சாரம் செய்தது நாகர்கோவில் மக்களை கவர்ந்தது. மக்கள் மற்றும் காலமாற்றத்திற்கு ஸ்டாலினும் விதிவிலக்கல்ல என்று இந்த நிகழ்வை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.