மெரீனாவில் கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட ஸ்டாலின் !
மெரீனா கடற்கரையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு திடீர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், மெரீனா கடற்கரையில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவின் இரு அணிகளும் நாளை இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் நாளை ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்வையிடுவதற்காக 122 எம்எல்ஏ-க்களும் சென்னை திரும்பும்படியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறினார். இணைந்து செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அதிமுகவில் நிலவி வந்த பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள் இருவருடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் இதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மூத்த தலைவர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலின் திடீரென மெரீனாவில் சேர் போட்டு உட்கார்ந்து ஆலோசனை நடத்துவதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.